அரசு தொழில்நுட்பத் தேர்வுகளின் வணிகவியல் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இது குறித்து தொழில்நுட்பக் கல்வித்துறை தேர்வு வாரியத் தலைவர் லட்சுமி பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 


தேர்வுகள்:


2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு நேற்று (டிசம்பர் 27ஆம் தேதி) விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. தேர்வர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 


இணைய தளத்தில் விண்ணப்பங்களில் திருத்தங்களை ஜனவரி 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான பதிவுக் கட்டணம் ரூ.30 ஆகும். இளநிலைப் படிப்புகளுக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இடைநிலைப் படிப்புகளுக்கு 120 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுநிலைப் படிப்புகளுக்கு 130 ரூபாயும் உயர் வேகப் படிப்புகளுக்கு 200 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


முழு விவரங்கள்:


இது தொடர்பான முழு விவரங்களை www.dte.tn.gov.in என்ற தொழில்நுட்பக் கல்வித் துறையின் இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம். 


கூடுதல் விவரங்களுக்கு 044-22351018, 22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு பயனடையலாம். 


இவ்வாறு தொழில்நுட்பக் கல்வித்துறை தேர்வு வாரியத் தலைவர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.


படிப்பு, தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அறிய: https://dte.tn.gov.in/index.php/Homepage/all_annocement என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். 


*


சி.பி.எஸ்.இ. செய்முறைத் தேர்வுகள்


2022- 23ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவர் செய்முறைத் தேர்வுகளுக்கு வராத பட்சத்தில், Absent என்று குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர் ஏதாவது ஒரு காரணத்தால், குறிப்பிட்ட தேர்வன்று வராத சூழலில், Re-scheduled என்று குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. Re-scheduled என்று குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ. வாரியம் கூறும் தேதியில் பள்ளிகள் மீண்டும் மறு தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பொதுத் தேர்வுகள் எப்போது?


எனினும் பொதுத் தேர்வு தேதிகள் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்குகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.