தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார். எனினும் இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.


தொடர் விமர்சனங்கள்


ஆசிரியை உமா மகேஸ்வரி செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளிக் கல்வியில் நிகழும் சிக்கல்கள் குறித்தும் கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்.


அதேபோல கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு ஊடகங்கள் வழியாகப் பொது வெளியில் பேசி வருகிறார். ஆசிரியர் உமா மகேஸ்வரி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் தொடர்ந்து பள்ளிக் கல்வி குறித்து எழுதி வருகிறார். அவரை பணியிடை நீக்கம் செய்வதாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.


பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் விதமாக பதிவுகள்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’’தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் எதிராக ஆசிரியர் உமா மகேஸ்வரி தனது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பக்கங்களில் எழுதி வருகிறார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் விதமாக உள்ளது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு எதிரான செயல் ஆகும். இதனால் ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். மார்ச் 6ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.


விதிகளின்படி பிழைப்பூதியமும் அகவிலைப்படியும் ஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு வழங்கப்படும்’’ என்று செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து உரிமைக்குச் சுதந்திரம் கிடையாதா?


இதற்கு ஆசிரியர்கள், கல்வி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயக நாட்டில், கருத்துரிமைக்கு சுதந்திரம் கிடையாதா? என்றும் அரசை விமர்சிப்பது பணியிடை நீக்கம் செய்ய வேண்டிய அளவுக்குப் பெரிய குற்றமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’சட்டநெறிமுறைப்படி, குற்றக் குறிப்பாணைகள் கொடுத்து, முறையான விசாரணை ஏதும் நடத்தாமல், நேரடியாக பணியிடை நீக்கத் தண்டனையை ஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு வழங்கியிருப்பது, முற்றிலும் சட்ட விரோதமானது மட்டுமின்றி, இதுபோல் மற்ற ஆசிரியர்கள் யாரும் மாணவர்களின் கல்வி உரிமை குறித்து, துணிச்சலாகப் பேசக் கூடாது என அச்சுறுத்துகிற முயற்சி. 


மக்களின் பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய கல்வித்துறை, முகநூல் பதிவுக்காக பணியிடை நீக்கம் செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது.