பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


பகுதிநேர ஆசிரியர்கள்:


தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தர, கடந்த 2012-ம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி விலகி/ ஓய்வு பெற்று விட்ட நிலையில், தற்போது சுமார் 12,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 


பகுதி நேர சிறப்பாசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது; அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம்; ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால்தான் அவர்கள் இப்பணியில் சேர்ந்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களுக்கு இப்போது ரூ.40,000 ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவதால் ரூ.10,000 மட்டுமே கிடைக்கிறது.


ஊதிய உயர்வு இல்லை


சிறப்பாசிரியர்களின் ஊதியம் 2014ஆம் ஆண்டில் ரூ.7,000 ஆகவும், பின்னர் ரூ.7,700 ஆகவும் உயர்த்தப் பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின் இதுவரை ஊதியம் உயர்த்தப்படவில்லை.


அதேபோல், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அந்த  அறிவிப்புகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை


பகுதி நேர ஆசிரியர்கள்  பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 


இதற்கிடையே ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் அலுவலகப் பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் 15% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.


போனஸ்


இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி உள்ளதாவது:


''தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில்  பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது!


பகுதி நேர ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதுதான் நியாயமாகும்!


பகுதி நேர ஆசிரியர்களின் நிலைமையை உணர்ந்து அவர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.  அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.