பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம்(Free Breakfast Scheme), அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. 1 - 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைக்கிறார்.


முதல்கட்டமாக 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தத் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. 


திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்ந்து 5 முக்கியத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. 


ஐந்தில் 3 மாணவர்கள் காலை உணவை உண்பதில்லை


சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''பள்ளி மாணவர்கள் காலை உணவை எப்போதும் தவற விடாதீர்கள். மாணவர்களிடம் நலன் பற்றி நான் தனியாக அவர்களிடம் உரையாடினேன். அப்போது ஐந்தில் 3 மாணவர்கள் காலை உணவை உண்ணவில்லை எனக் கூறினர். 


இதையடுத்து பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டேன். அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச காலைச் சிற்றுண்டி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது'' எனத் தெரிவித்தார்.  


அதைத் தொடர்ந்து காலைச் சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாகக் காலைச் சிற்றுண்டி திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் 


தமிழ்நாட்டில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில்,  காலை உணவு திட்டத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்கான பொறுப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டார்.




எந்தப் பள்ளிகள்?


முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தத் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. மதுரையில் உள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 4,388 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். 


23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.