இன்ஜினியரிங் முதல் கட்ட கலந்தாவில் 4வது சுற்று இன்றுடன் நிறைவடைந்த நிலையில், விருப்ப இடங்களை உறுதி செய்ய மாணவ-மாணவிகளுக்கு நவம்பர் 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

இன்ஜினியரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே 3 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 533 இடங்களில், பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றில் இதுவரை 58 ஆயிரத்து 307 இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன.

 

இந்த நிலையில் இன்ஜினியரிங் கலந்தாய்வின் முதல் கட்டத்தில் 4வது சுற்று கலந்தாய்வுக்கு 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்று விருப்ப இடங்களை தேர்வு செய்ய மாணவர்களுக்கு கடந்த மாதம் 29, 30 மற்றும் 31ம் தேதிகளில் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, விருப்ப இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 36 ஆயிரத்து 57 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதனை உறுதி செய்வதற்கு வருகின்ற 10ம் தேதி வரை மாணவ-மாணவிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, மொத்தம் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்து 533 இடங்களில் 94 ஆயிரத்து 364 இடங்கள் நிரப்பப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. 4வது சுற்றில் ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்ற மாணவர்கள் அதனை உறுதி செய்யும்போது, 4 சுற்றுகளையும் சேர்த்து அதாவது முதல் கட்ட கலந்தாய்வில் எவ்வளவு இடங்கள் நிரம்பி இருக்கின்றன என்பது தெளிவாக தெரியும். அதற்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கிறது. இதுதவிர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வில், 660 இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.



 


டிசம்பரில் ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாள் தேர்வு -  அதிகாரிகள் தகவல்

 








ஆசிரியர் தகுதி தேர்வு, 2ம் தாளுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

 

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளில் சேர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாள்1, தாள்2 என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தாள் 1ல் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், தாள் 2ல் வெற்றி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் தகுதி பெறுவார்கள்.

 

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தாள் 1க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், 2ம் தாள் தேர்வுக்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்தனர். முதல் தாள் தேர்வு கடந்த மாதம் (அக்டோபர்) 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை கணினி வாயிலாக நடத்தி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2ம் தாள் தேர்வு எப்போது நடைபெறும்? அதுதொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில் ஆசிரியர் தகுதி தாள்2 தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.