ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு முடித்தவர்களை போட்டித்‌ தேர்வின்றி பணி நியமனம்‌ செய்ய வேண்டும் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கை என்பது மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்‌ கட்டிலில்‌ அமர வேண்டும்‌ என்பதற்காக தயாரிக்கப்பட்டதே தவிர, அதில்‌ உண்மை என்பது சிறிதளவு கூட இல்லை என்பதை ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின்‌ நடவடிக்கைகள்‌ உணர்த்தியுள்ளன. தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையினை பொய்மையின்‌ மறு உருவம்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது. இதற்கு ஒரு உதாரணம்தான்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர்‌ பணி வழங்காதது.


2020 ஆம்‌ ஆண்டு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றஆசிரியர்களுக்கு பணி வழங்கக்‌ கோரி ஆசிரியர்கள்‌ போராட்டம்‌ நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல்‌ கொடுத்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்‌ 80,000 ஆசிரியர்களின்‌ கோரிக்கைகள்‌ நிறைவேற்றப்படும்‌ என்றும்‌, போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும்‌ அப்போதைய எதிர்க் கட்சித்‌ தலைவர்‌ ஸ்டாலின் வேண்டுகோள்‌ விடுத்தார்‌.


வெயிட்டேஜ் முறையால் வேலைவாய்ப்பு மறுப்பு


இதுகுறித்து 06-06-2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ பேசிய அப்போதைய தி.மு.க. உறுப்பினரும்‌, தற்போதைய தொழில்‌ துறை அமைச்சருமான தங்கம்‌ தென்னரசு “weightage” முறையை தயவுசெய்து நீக்குங்கள்‌, “weightage” முறையினாலேதான்‌ இந்த நாட்டிலே பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைக்கு இந்த வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்‌.


இதனைத்‌ தொடர்ந்து, தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌, 2013ஆம்‌ ஆண்டு முதல்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலம்‌ நடத்தப்படும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும்‌ வேலைவாய்ப்பினைப்‌ பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள்‌ கடந்த நிலையில்‌, ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களை போட்டித்‌ தேர்வின்றி பணியமர்த்துவது குறித்தோ அல்லது weightage முறையை நீக்குவது குறித்தோ எந்தவிதமான அறிவிப்பையும்‌ தி.மு.க. அரசு வெளியிடவில்லை. மாறாக, போட்டித்‌ தேர்வை எதிர்த்துக்‌ குரல்‌ கொடுத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ போட்டித்‌ தேர்வு நடத்தப்படும்‌ என்று அறிவித்து இருக்கிறது.




தேர்தல்‌ வாக்குறுதிக்கு முற்றிலும்‌ முரணான முடிவு


'திராவிட மாடல்‌” என்ற போர்வையில்‌ தேர்தல்‌ வாக்குறுதிக்கு முற்றிலும்‌ முரணான ஒரு முடிவை தி.மு.க. அரசு எடுத்துள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதனை எதிர்த்து ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்கள்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டிருக்கிறார்கள்‌. 


'ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு சான்றிதழ்‌ ஆயுள்‌ முழுவதும்‌ செல்லும்‌” என்று மத்திய அரசு உத்தரவிட்டு ஒராண்டு கடந்த நிலையில்‌, தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ குறிப்பிட்டபடி ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்‌, அரசு சார்பில்‌ அறிவிக்கப்பட்டுள்ள போட்டித்‌ தேர்வினை ரத்து செய்துவிட்டு, தேர்ச்சி மூப்பு அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்க வேண்டும்‌ என்றும்‌ பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்கள்‌.


ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின்‌ கோரிக்கையை கனிவுடன்‌ பரிசீலித்து, போட்டித்‌ தேர்வினை ரத்து செய்யவும்‌, தேர்ச்சி மூப்பு அடிப்படையில்‌ அவர்களை பணியமர்த்தவும்‌ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலினை வலியுறுத்திக்‌ கேட்டுக் கொள்கிறேன்‌’’.


இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.