நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரும் படிக்கும் வகையில், டெல்லியில் மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இன்று (ஆகஸ்ட் 31ஆம் தேதி) மெய்நிகர் பள்ளிகளைத் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் படிக்கலாம். 


உலகம் முழுவதும் கல்வி அடுத்தடுத்த கட்டங்களை எட்டி வருகிறது. குரு குலக் கல்வி, வீடுகளில் கல்வி, பள்ளிகளில் கல்வி என்று கற்பித்தல் முறை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. சீனாவில் தொடங்கி உலகம் முழுக்கப் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, ஆன்லைன் கல்வி முறையை அறிமுகம் செய்தது. 


இந்த நிலையில் டெல்லியில் தற்போது மெய்நிகர் பள்ளிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இன்று (ஆகஸ்ட் 31ஆம் தேதி) தொடங்கி உள்ளது. இந்தப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் சேர்ந்து படிக்கலாம். 




பள்ளிகளைத் தொடங்கி வைத்தபிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசும்போது, ’’பள்ளிகளில் இருந்து வெகுதூரத்தில் இருப்பது மற்றும் பிற காரணங்களால், ஏராளமான குழந்தைகளால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. பல்வேறு பெற்றோர் தங்களின் பெண் குழந்தைகளை வெளியே அனுப்ப பயந்து, பள்ளிக்கு விடுவதில்லை.


கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. அதை அடிப்படையாகக் கொண்டு விர்ச்சுவல் பள்ளிகள் எனப்படும் மெய்நிகர் பள்ளிகளைத் தொடங்கியுள்ளோம். இதற்கான வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பாடங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.


 






மேலும் பேசிய அவர், ’’இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் அனைவரும் இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கலாம். திறன் வாய்ந்த நிபுணர்களின் உதவியுடன் நீட், க்யூட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும். நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப் பெற்றுள்ள மெய்நிகர் பள்ளி, நிச்சயம் கல்வித் துறையில் ஒரு மைல் கல்லாக அமையும்’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.


இதையும் வாசிக்கலாம்


GATE 2023 Exam: பொறியியல் Gate தேர்வு தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?


வகுத்தல் பாடம் தெரியாமல் விழித்த தலைமை ஆசிரியை; ஆட்சியர் செய்த அதிரடி