இளங்கலை க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூன் 26ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். 


இதுவரை சுமார் 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 


3 பிரிவுகளாகக் கேள்விகள்


பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும். 


இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். 


2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்


ஜூலை மாதத்தில் தேர்வு


இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. ஜூலை மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெறும். 


குறிப்பாக 15.07.2022, 16.07.2022, 19.07.2022, 20.07.2022 மற்றும் 04.08.2022, 05.08.2022, 06.08.2022, 07.08.2022, 08.08.2022, 10.08.2022 ஆகிய தேதிகளில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகள் காரணமாக இடையில் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 




இதற்கு மாணவர்கள் ஜூன் 24 வரை https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் கோரிக்கையை அடுத்து, 2 நாட்களுக்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வர்கள் இன்று (ஜூன் 26ஆம் தேதி) இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் இன்று கடைசித் தேதி ஆகும். இனி கால அவகாச நீட்டிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://cdnasb.samarth.ac.in/site/Public_Notice_Correction_Category.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து படிக்கவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண