புயல் பாதிப்புக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டக் கல்லூரிகளும் டிசம்பர் 11-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதையொட்டி கல்லூரிக் கல்வி இயக்ககம் 20 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


இதில் குடிநீர்த் தொட்டிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின. இதில் வீடுகள், கடைகளோடு, பள்ளி, கல்லூரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


20 வகையான வழிகாட்டு நெறிமுறைகள்


இந்த நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குப் பிறகு டிசம்பர் 11ஆம் தேதிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி கல்லூரிக் கல்வி இயக்ககம் 20 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


* கல்லூரி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும்போது அவர்களுக்கு நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கி தருவதை உறுதி செய்யவேண்டும்.


* கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். வளாகத்தில் முட்புதர்கள் இருப்பின் அவை அகற்றப்பட வேண்டும்.


* தொடர் மழையின் காரணமாக கல்லூரியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கலாம். எனவே சுற்றுச்சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்படவேண்டும்.


* கல்லூரி வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்களையும் கட்டிட இடிபாடுகளையும் அகற்ற வேண்டும்.


பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்


* மழையின் காரணமாக கல்லூரிகளில் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதோடு, அவற்றின் அருகில் மாணவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாணவர்கள் அத்தகைய கட்டிடங்களை அணுகாதவாறு, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.


* கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுவதும் ஆய்வு செய்து விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதிசெய்ய வேண்டும். மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் இருந்தால் அதனை ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும். தேவையென்றால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கலாம்.


* கட்டிடங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு, மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* குடிநீர்த் தொட்டிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.


இவ்வாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.