இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர இன்று (செப்.21) முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். 


இந்திய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, முதுகலையில் எம்டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுஷ் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு , நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி தெரிவித்துள்ளார். 


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி  பேட்டியில், 2022-23ம் கல்வியாண்டில்  எம்டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, பட்டயப் படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் www.tnhealth.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 


மருத்துவப் பட்டப் படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புகளில் நீட் தேர்வு மற்றும் 12 ம்  வகுப்பில் முதல் முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 


இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் 280 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 1164 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. 


மேலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். பட்டயப் படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்பிற்கு 12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 


இயற்கை மருத்துவம், யோகா படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.