அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு சமர்பித்தது. 


ஆவணங்களை சமர்ப்பித்த இபிஎஸ் தரப்பு:


அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் தேர்வு செய்துள்ளதாக  2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களது ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் வழங்கப்பட்ட கடிதங்களை, தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு சமர்பித்தது.


டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம், உறுப்பினர்களின் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் சமர்ப்பித்தார்.


ஒற்றைத் தலைமை


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இப்பதவியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இப்பதவிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என இபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஒற்றை தலைமை கோரிக்கைக்கு ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு:


இந்நிலையில் கடந்த ஜூலை மாதம்  11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.


இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கிலும் , இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு தலைமை அலுவலகத்தின் சாவி வழங்கப்பட்டது.


இந்நிலையில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களது ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கியிருந்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கப்பட்ட பத்திரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சி.வி.சண்முகம் வழங்கினார். 


சி.வி.சண்முகம் கோரிக்கை:


இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்பித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் பேசியதாவது, இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு மற்றும் 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவதை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் உட்பட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலையும் சமர்பித்துள்ளோம், மேலும் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஏற்று வலைதளங்களில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.





இந்நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.