TNPSC Group 4 Result 2023: குரூப் 4 தேர்வு நடந்து 8 மாதங்கள் ஆன நிலையில், 18 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம். 


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம். 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வு என்பதால், இதற்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.


இதற்கிடையே குரூப் 4 தேர்வுகளுக்காக 7,382 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022-ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர். 


இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் தாமதமான நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. மீண்டும் மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் முதல் வாரம் முடிந்தும் தேர்வு முடிவுகள் வெளியாகததால், தேர்வர்கள் தேர்வு முடிவுகள் தேவை என்று ட்ரெண்டாக்கினர். 


டிஎன்பிஎஸ்சி விளக்கம்


இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின் தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ்‌ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு - 4 (குரூப் 4) இல்‌ அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின்‌ முடிவுகள்‌ குறித்து தேர்வாணையத்தால்‌ 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக் குறிப்பில்‌ தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள்‌ தொடர்பான பணிகள்‌ தற்போது தேர்வாணையத்தில்‌ துரிதமாக நடைபெற்று வருகின்றன. 


மேலும்‌, இத்தேர்வின்‌ முடிவுகள்‌ இம்மாத இறுதிக்குள்‌ வெளியிடப்படும்‌ என்று மீண்டும்‌ தேர்வர்களின்‌ கனிவான தகவலுக்காகத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டது.


இந்த நிலையில் தேர்வு நடைபெற்று சரியாக 8 மாதங்கள் கழித்து இன்று (மார்ச் 24) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 


கூடுதல் பணியிடங்கள்


குரூப் 4 அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் என மொத்தம் 7,382 காலி இடங்கள் இருந்த நிலையில், மொத்தப் பணியிடங்கள்  10,117 ஆக அதிகரிக்கப்பட்டன. இதற்கான திருத்தப்பட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. இதனால் தேர்வர்களின் கட்- ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது.