NEET Re-Exam Result: சர்ச்சைக்கு மத்தியில் நடைபெற்ற நீட் மறுதேர்வுக்கான,  முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.


நீட் மறுதேர்வு முடிவுகள்:


கருணை மதிப்பெண் வழங்கப்பட்டோருக்கு நடைபெற்ற நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கருணை மதிப்பெண்கள் வழங்கிய ஆயிரத்து 563 பேருக்கு ஜூன் 23ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. அவர்களில் 816 பேர் மட்டுமே நீட் மறுதேர்வை எழுதிய நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் தங்களது முடிவுகளை அறியலாம். நேர இழப்பு உள்ளிட்ட காரணங்களால் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ஒரே தேர்வு அறையில் தேர்வு எழுதிய 6 பேர் முழு மதிப்பெண் பெற்றது சண்தேகங்களை கிளப்பியது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஆயிரத்து 563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. 


நீட் தேர்வு முடிவுகளும்.. சர்ச்சைகளும்..!


2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஜூன் 14ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி இரவே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர். இது அதிர்ச்சியை ஏற்பட்டது.


நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்தது. ஆனால் இதுதொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். பீகார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கைது நடந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.


மறுதேர்வை தவிர்த்த மாணவர்கள்:


 இதற்கிடையே நடந்து முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி,  நாடு முழுவதும் 7 மையங்களில் 1,563 பேருக்கு மறுதேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை, அதாவது 813 மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. 


இதில் சண்டிகர் மையத்தில் 2 தேர்வர்கள் தேர்வை எழுதவில்லை. ஏராளமான டாப்பர்கள் இடம்பெற்றதால் அதிகம் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்ட ஜஜ்ஜார் மையத்தில், 494 பேர் தேர்வு எழுத வேண்டி இருந்த நிலையில், 287 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். சத்தீஸ்கரில் 291 தேர்வர்களும் குஜராத்தில் ஒருவரும் மேகாலயாவில் 234 தேர்வர்களும் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் கலந்துகொள்ளாத 48 சதவீத மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் இல்லாமல் தாங்கள் பெற்ற மதிப்பெண்களையே இறுதியாகக் கொண்டுள்ளனர்.