11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகின. இதில் மொத்தம் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


11ஆம் வகுப்பில் 84.86% மாணவர்களும் 94.99% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 10.13% பேர் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன.


குறிப்பாக 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வை சுமார் 8.83 லட்சம் மாணவர்கள் எழுதினர்.


இதனிடையே 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்களைத் திருத்தி முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகின. 




தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?



மாணவர்கள் முதலில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்பு, தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.


http://tnresults.nic.in/
https://dge.tn.nic.in/
https://dge1.tn.nic.in/
https://dge2.tn.nic.in/


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் 


முன்னதாக 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்தது. அந்த வகையில் பிளஸ் 1 தேர்விலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் மொத்தம் 95.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 93.60% மாணவர்களும் 97.62% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 80.02% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 70.63% மாணவர்களும், 88.85 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


எந்தெந்தப் பள்ளிகளில் எவ்வளவு தேர்ச்சி?


அரசுப் பள்ளிகளில் 83.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.65 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 99.35 % பேரும் இருபாலர் பள்ளிகளில் 90.44 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.90 ஆக உள்ளது. ஆண்கள் பள்ளி தேர்ச்சி விகிதம் 78 ஆகக் குறைந்துள்ளது.  
*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண