திருவாரூர் அருகே உள்ள அகரதிருநல்லூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் குமரேசன் வயது 35. இவருக்கு சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குமரேசன் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் சுசீலா என்பவருடன் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு அரிசி மூட்டையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்ற போது  மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென குமரேசன் மோட்டார் சைக்களை வழி மறித்தனர். இதில் குமரேசன் சுதாரிப்பதற்கு முன்னதாக அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். தலை முழுமையாக சிதைந்து சம்பவ இடத்திலே குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.



 

இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடி வருவதற்குள் 7 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். தகவல் அறிந்த திருவாரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைபற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் குமரேசன் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் நகர காவல்  ஆய்வாளர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் நேரில் பார்த்த உறவினர் பெண் சுசீலாவிடம் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

இந்தநிலையில் குமரேசன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று குமரேசனை கொலை செய்ததாக கூறி பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் உட்பட 5 பேர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், திருவாரூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார், திருவாரூர் மாவட்டம் பௌதிரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், அகரத்திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன், ஆகிய ஐந்து நபர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதில் கலைச்செல்வன் என்பவர் பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காவல்துறையினர் இந்த 5 நபர்களையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.