ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் ஒரு புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த முறையும் மனைவியே கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து காதலனுடன் இதனை அரங்கேற்றியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருப்பத்திற்கு மாறாக திருமணம்

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் தான் இந்த கொடூர கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு அஞ்சலி என்ற பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆஷிஷ் குமார் என்பவரை திருமணம் செய்தார். ஏற்கனவே அஞ்சலி சஞ்சய் என்ற நபரை காதலித்து வந்த நிலையில் இதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அஞ்சலி விருப்பத்திற்கு மாறாக 2025, அக்டோபர் 30ம் தேதி ஆஷிஷ் குமாருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆஷிஷ் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

ஆனால் காதலன் சஞ்சயை மறக்க முடியாத அஞ்சலி, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் அவருடன் தொடர்பில் இருக்க முடிவு செய்தார். அதற்காக ஸ்ரீ கங்காநகரில் தனது படிப்பைத் தொடர ஆஷிஷிடம் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மருக்கப்பட்டது.இந்த நிலையில் ஆஷிஷ் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு அஞ்சலி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அங்கு தன் காதலி சஞ்சயை சந்தித்து பேசியுள்ளார். அதன் விளைவாக ஆஷிஷ் குமாரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். 

பக்கவாக போடப்பட்ட ஸ்கெட்ச்

திட்டப்படி கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இரவு, சாப்பிட்ட பிறகு அஞ்சலி ஆஷிஷை வலுக்கட்டாயமாக வாக்கிங் செல்ல அழைத்துள்ளார். அதன்படி ராவ்லா காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய சாலையில் இருவரும் சென்றுள்ளனர். அப்போது தங்களின் திட்டப்படி சஞ்சய் அறிவுறுத்தலின்பேரில் ரோஹித் என்ற ராக்கி மற்றும் பாதல் சித்தார்த் ஆகிய இருவரும் அருகிலுள்ள புதர் ஒன்றில் மறைந்திருந்தனர். 

சரியான நேரத்தில் அஞ்சலி சிக்னல் கொடுக்க புதரில் மறைந்திருந்த இருவரும் கம்பால் ஆஷிஷை கடுமையாக தாக்கியுள்ளனர். ஆனால் அவர் உயிரிழக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மஃப்ளரால் அவரது கழுத்தை நெறித்து கொன்றனர். இந்த சம்பவத்தை திசை திருப்ப அஞ்சலி, ஆஷிஷின் மொபைல் போன் மற்றும் அவரது நகைகள் கொடுத்தனுப்பப்பட்டது. இந்த சம்பவம் விபத்து அல்லது திருட்டாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. 

அன்று இரவு 9 மணிக்கு ஸ்ரீ கங்காநகர் காவல்துறையினருக்கு சாலையில் ஒரு தம்பதியினர் மயக்கமடைந்து கிடப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் ஆஷிஷ் உயிரிழந்தது தெரிய வந்தது. அஞ்சலி போலீசாரிடம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதாகவும், தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்காக அறிகுறிகள் இல்லாமல் இருந்துள்ளது. 

அதேசமயம் ஆஷிஷின் பிரேத பரிசோதனை அறிக்கை அவர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது. இந்த நிலையில் அஞ்சலி சஞ்சயுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.