மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ளது முட்டம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். அந்த பயிர்களுக்கு, சிட்டா, அடங்கலுடன் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு என்பவரிடம் சமர்ப்பித்து பயிர்க்காப்பீட்டினையும் செய்திருந்தனர். 




அந்த பருவத்தில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 68 சதவீதத் தொகையாக 22 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இந்த காப்பீட்டுத் தொகையானது பல விவசாயிகளுக்கு  வந்து சேரவில்லை. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளை அணுகி விபரம் கேட்டுள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் அவர்களிடம் உழவன் செயலியை பயன்படுத்தி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம் என விளக்கியுள்ளனர். 




அதனைத் தொடர்ந்து விவசாயிகள் உழவன் செயலில் பார்த்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, அதில் அதே புல எண்ணில் வேறொரு நபர்களுக்கு தொகை செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர்கள் யார் எனப்பார்த்ததில், அவர்கள் அனைவருமே கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அதிர்ச்சியாக சிலரது புல எண்ணுக்கான காப்பீட்டுத் தொகை கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் பெயருக்கே வரவு வைக்கப்பட்டிருந்தது. 




இதையடுத்து, அவரிடம் நேரில் சென்று விவசாயிகள் கேட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். அப்புகாரில் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு போலியான சிட்டா, அடங்கல் வழங்கி மறையூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றும், அதன்பேரில் பயிர்க்காப்பீடு பெற்றும் ஊழல் செய்துள்ளதாகவும், அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 




காப்பீடு மூலம் மட்டுமே சுமார் 100 ஏக்கர் பயிருக்கு 22 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்ற வகையில் பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் பாலாஜி அவர்கள் ஆவணங்களை சரிபார்த்ததில் வி.ஏ.ஓ போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ திருமலைசங்கு அவர்களை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோல் முறையீட்டில் வேறு சில கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.