விழுப்புரம் : காதலர் தினம் கொண்டாடுவதற்கும் காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்க பணமில்லாததால் கல்லூரி மாணவர் நண்பருடன் இணைந்து திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மலையரசன் குப்பம் கிராமத்தில் ரேணுகா என்பதற்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இரு இளைஞர்கள் ஆடு ஒன்றினை தூக்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஆட்டினை திருடி செல்வதை கண்ட ரேனுகா திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

 

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆடினை திருடிச் சென்ற கல்லூரி மாணவன் அரவிந்த் குமார் (20) மற்றும் அவனது நண்பன் மோகன் (20) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும் தனது காதலிக்கு பரிசு வாங்கி கொடுக்க கல்லூரி மாணவர் அரவிந்திடம் பணம் இல்லாத காரணத்தால் தனது நண்பர் மோகன் உதவியுடன் ஆட்டினை திருட திட்டம் தீட்டி ஆட்டினை திருடியதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கண்டாச்சிபுரம் பகுதிகளில் ஆடு திருடுவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.