திண்டிவனத்தில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த் (44). பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். புதுவையில் இருந்து இவரும் இவரது மனைவி கல்யாணி வயது 42 சென்றனர். காரை கிருஷ்ணகாந்த் ஓட்டி வந்தார். கார் திண்டிவனம் மேம்பாலத்தில் மேல் பகுதியில் திருவண்ணாமலை மார்க்கமாக  வந்து கொண்டிருந்தது. அப்போது, காரில் இருந்து திடீரென்று புகை வந்ததை பார்த்து மேம்பாலத்திற்கு மேல் பேருந்துக்காக காத்திருந்தார்கள் கிருஷ்ணகாந்த் இடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரில் இருந்து இறங்கினர்.


பின்னர் சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து உடனடியாக இறங்கியதால் கிருஷ்ணகாந்த் மற்றும் அவரது மனைவி கல்யாணி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர்  ஆனந்தராசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திண்டிவனம் மேம்பாலத்தில் மேல் பகுதியில் இந்த தீ விபத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதேபோல், கடந்த சிலதினங்களுக்கு முன் செஞ்சி அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார் மர்மமான முறையில்  திடீரென தீப்பற்றி எரிந்து. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எந்தவித காரணமும் இல்லாமல் கார் தீப்பற்றி எரிந்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டு வாசலில் உயர்ரக சைலோ காரை நிறுத்தி வைத்திருந்தார். திடீரென அந்த கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மமான முறையில் திடீரென கார் எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.