மதுபான கொள்முதல், விற்பனையில் கமிசன் பெறுவதாக பேசியதற்காக 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

தமிழக பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள சி.டி.ஆர்.நிர்மல்குமார் அண்மையில் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் குறித்தும், விற்பனை குறித்தும் பேசியிருந்தார். 

 

அதில் துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி கமிசன் பெறுவதாக பேசியிருந்தார். மேலும், காந்தி ஜெயந்தி அன்று  தமிழகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கும் அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்திலும் நிர்மல்குமார் பதிவிட்டிருந்தார்.

 

நிர்மல்குமாரின் கருத்து எவ்வித அடிப்படை ஆதாரம் இல்லாமலும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக வழக்கறிஞர் ரிச்சர்டான் வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

 

அதில், சம்பந்தப்பட்ட ட்விட்டர் பதிவை நீக்க வேண்டுமெனவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவற்றை ஒரு வாரத்தில் செய்ய தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், பதிவுகளை நீக்கும்படி யூட்யூப் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

















 

உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று தான் கோவில் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.கோவில்களின் உபரி நிதியில் தான் முதியோர் இல்லங்கள் கட்டப்படுகின்றன தமிழக அரசு விளக்கம்.

 


உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள்,மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று தான் கோவில் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

 

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. 

 

அதன்படி, சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் மற்றும் எலங்கியம்மன் கோவில் நிதியில் இருந்து 16.30 கோடி ரூபாயும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருந்து 13.50 கோடி ரூபாயும், பழனி தண்டாயுத பாணி கோவிலில் இருந்து 15.20 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தி, சென்னை, திருநெல்வேலி மற்றும் பழனியில் முதியோர் இல்லங்கள் துவங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 12ம் தேதி அறநிலைய துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 

இதை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, சட்டப்படி கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது எனவும், அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும் அறங்காவலர்கள் மூலமாக பொதுமக்கள் ஆட்சேபங்களைப் பெற்று முடிவெடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

மூன்று கோவில்களில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க உள்ளனர் என தெரியவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பல காரணங்களால் பல கோவில்களில்  அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு பதிலாக தக்கார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அதிகாரம் குறித்து தலைமை நீதிபதி அமர்வும், கோவில் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

 

உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள்,மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று முதியோர் இல்லங்கள் துவங்கப்பட உள்ளதாகவும், கோவில்களின் உபரி நிதி தான் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர், இதேபோல கோவில் நகைகளை உருக்குவதை எதிர்த்தும், கோவில் நிதியில் கல்லூரி துவங்குவதை எதிர்த்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அரசும் கோவில்களுக்கு நிதி ஒதுக்குவதாகவும், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 130 கோடி ரூபாய் சமீபத்தில் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

 

இதையடுத்து, பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு மனு அளிக்க இரு தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.