விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.


கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன் மிதுன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மகா விஷ்ணு (20). இவர்கள் 2 பேரும் வேலாண்டி பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று கல்லூரி மாணவர்கள் 15 பேர் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். அதன் பின்னர் கோட்டக்குப்பம் அருகே பெரிய முதலியார் சாடியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நேற்று மதியம் பெரிய முதலியார் சாவடியில் உள்ள கடற்கரையில் குளித்தனர். அப்போது ராட்சத அலை மிதுன், மகாவிஷ்ணு ஆகிய 2 பேரை இழுத்து சென்றது.


அதிர்ச்சியடைந்த 2 பேரும் அபய குரலிட்டனர். உடனடியாக மற்றவர்கள் 2 பேரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் 2 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களிடன் இணைந்து கடலில் இறங்கி தேடினர். ஆனால் அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இன்று தந்திராயன் குப்பம் கடற்கரையில் 2 பேர் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர்.


அப்போது கடலில் மூழ்கிய மாணவர்கள் மிதுன், மகா விஷ்ணு ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பெரியமுதலியார் சாவடி வந்தனர். இறந்துபோன தங்களது மகன்களின் உடலை பார்த்து கதறி துடித்தனர். கடலில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.