கோவையில் 2 வயது குழந்தையை பெற்ற தாயே அடித்து சித்ரவதை செய்த நிலையில், அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.


கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். 34 வயதான இவர், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தில்சாத் பானு (33). இத்தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகளும் இருந்தன. 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் முகமது ரபீக் - தில்சாத் பானு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரமடைந்த தில்சாத் பானு தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் இரண்டு வயது பெண் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து அக்குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் தில்சாத் பானு சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் குழந்தையின் உடல் முழுவதும் இருந்த காயங்கள் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவர்கள் போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் தில்சாத் பானு அடித்ததால் தான் குழந்தை காயமடைந்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.


இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போத்தனூர் காவல் துறையினர், தில்சாத் பானுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே இரண்டு வயது குழந்தையை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததில், அக்குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண