வேலூர் தோட்டப்பாளையம் பகுதி காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகை கடையில் கடந்த 15 ஆம் தேதி சுவற்றில் துளையிடப்பட்டு சுமார் 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த உடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி. பாபு ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். 


நகைக்கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் ஸ்பிரே அடித்து நகைகளை திருடி சென்றதும், கொள்ளையன் முழுமையாக சிங்கம் உருவத்துடன் கூடிய மாஸ்க் மற்றும் தலையில் விக் அணிந்து சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் தீவிர விசாரனைக்கு பிறகு கொள்ளையனை கண்டு பிடித்து அவனிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.




இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி. பாபு கூறுகையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து 5 நாட்களிலேயே குற்றவாளியை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட 8 கோடி மதிப்பிலான சுமார் 16 கிலோ தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் ஆகிய நகைகளை குற்றவாளியிடம் இருந்து மீட்டுள்ளனர். இதில் குறிப்பிடும்படியாக தனிப்படையினர் விஞ்ஞான பூர்வமாகவும் பழைய முறைகளை பின்பற்றியும் புலன் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.




இரவு, பகல் பாராமல் மிகவும் கடுமையாக உழைத்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான டீக்காராமன் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை ஒடுகத்தூர் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை மாலையில் அவரிடம் இருந்து கைப்பற்றினோம். மேலும் இக்குற்றச் சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மீது குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதற்கான இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.




நகைக்கடையில் இதெல்லாம் மைனஸ்


இந்த நகைக்கடையில் எச்சரிக்கை அலாரம் (Burglar Alarm) இருந்தும் வேலை செய்யவில்லை. மேலும் அவர்கள் அந்த அலாரம் வேலை செய்கிறதா என்பதையும் சோதனை செய்யவில்லை. இன்னொரு மிகப்பெரிய பிழை சிசிடிவி கேமிரா வெறும் கடையினுள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததே தவிற கடையின் பின்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை.




இது போன்ற மிகப் பெரிய நகைக் கடைகளில் நான்கு புறங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இது போன்ற அமைப்பில் சிசிடிவி கேமிரா இந்த கடையில் இல்லாத காரணத்தால் கொள்ளையன் எளிதில் பின்னே நுழைந்து உள்ளான். இது போன்ற குறைகளை களைய அவர்களிடம் கூறி உள்ளோம்.




10 நாட்களாக சுவரை துளையிட்டது அம்பலம் 


கொத்தனாராக பணியாற்றி வரும் இவர் 10 நாட்கள் திட்டமிட்டு மெதுவாக துளையிட்டு, ஒவ்வொரு இரவும் வந்து பொறுமையாக துளையிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு காவலாளிகள் காவல் பணியில் இருந்தும் அவர்கள் பின் பகுதிக்குச் சென்று பார்ப்பதில்லை. இதனால் அந்த துளை அவர்கள் கண்களுக்கு படவில்லை.




மேலும் இது குறித்து கூறிய காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் கூறுகையில், கொள்ளையன் எந்த வழியாக தப்பித்து இருக்க முடியும் என்று நாங்கள் கணித்தோம். பிறகு எஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் இரவுபகல் என 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள சுமார் 200 சிசிடிவி கேமிரா பதிவுகளை முழுமையாக அலசி ஆராய்ந்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக இருக்கக்கூடிய நபர்களை டிராக் செய்து குற்றவாளியை கண்டுபிடித்துள்ளோம் என்றார்.


யூட்டியூப் பார்த்து கொள்ளை அடித்த திருடன் 


கடையின் உள்ளே சென்று கொள்ளையடிப்பதற்கு பத்து நாட்கள் தொடர்ந்து மெதுமெதுவாக கடையின் பின்புறம் துளையிட்ட கொள்ளையன். சப்தமின்றி துளையிடுவது எப்படி? என்றும் இதற்கு முன் நடைபெற்ற பெரும் கொள்ளைகளில் என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்றும் ஆராய்ந்து அந்த தவறுகள் தான் கொள்ளை அடிக்கும் போது நிகழாத வண்ணம் இருப்பதற்காக யூடியூப்பில் உள்ள காணொலிகளை பார்த்து கற்றுக்கொண்டுள்ளான் என்றார்.



 


குற்றவாளி ஒரு சிவன் பக்தர். ஆகவே கொள்ளையடித்த நகையில் இருந்த ருத்ராட்ச மாலையை மட்டும் அவர் தன்னிடம் வைத்துக்கொண்டு மற்றவற்றை புதைத்து வைத்திருந்தார். முதலில் கிடைத்த இந்த ருத்திராட்ச மாலையின் மூலமாகவே இந்த கொள்ளையனை பிடித்தோம் என்றார்.


சிசிடிவி கேமிராக்களை ஆடிட் செய்ய வேண்டும்


இதுபோன்று தொழில்நுட்ப தவறுகள் மேலும் நிகழாமல் இருப்பதற்கு தங்களது நிறுவனங்களில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமிராக்கள் முறையாக இயங்குகின்றனவா என்று தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியுடன் தொடர்ந்து ஆடிட் செய்ய வேண்டும். இதற்கென்று இருக்கக்கூடிய நிறுவனங்கள் வந்து ஆடிட் செய்தால் மட்டுமே நம்மிடம் இருக்க கூடிய தவறுகள் தெரியவரும். எனவே இதனை அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மற்றும் இதுபோன்ற நகைக் கடைகள், பொரு நிறுவனங்கள் இந்த ஆடிட் முறையை பின்பற்றும்படி வழியுறுத்தி வருகிறோம் என்றார். இந்த கொள்ளையனை கண்டுபிடிக்க உழைத்த அனைத்து காவலர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க உள்ளோம் என்றார். தொடரும் விசாரணை.