வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ளா தனியார் பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் திருத்தப்பட்ட 3 முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இது குறித்த முதல் கட்ட பயிற்சி முகாம் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் பாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் இருந்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இப்பயிற்சியில்  கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு காலை மற்றும் மாலை என இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காட்பாடி காவல் நிலைய தலைமை காவலர் கோபி என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார்.




 


போலீசார் பயிற்சி வகுப்பில் போதையில் தள்ளாடிய தலைமை காவலர் 


மேலும் காவல் ஆய்வாளர் பாரதி, புதிய சட்டங்கள் தொடர்பான கேள்வியை எழுப்பியபோது அவரிடம் தலைமை காவலர் கோபி அநாகரீகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெண் ஆய்வாளரிடம் அவர் பேசிய விதம் அங்கு வந்திருந்த காவலர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியது . இதையடுத்து, தலைமை காவலர் கோபிக்கு விளக்க நோட்டீஸ் வழங்க காவல் ஆய்வாளர் பாரதி முயன்றுள்ளார். இதை அறிந்த சில காவலர்கள் கோபியை அங்கிருந்து வெளியே சென்று விடும்படி ஜாடை காட்டியுள்ளனர். அவரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது விரட்டிச்சென்ற சில காவல் அதிகாரிகள் தலைமை காவலர் கோபியை மடக்கிப்பிடித்தனர். பின்னர் மது போதையில் இருந்த தலைமை காவலர் கோபியை காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். 




 தலைமை காவலர் பணியிடை நீக்கம்  


அவர் மதுபோதையில் இருந்ததற்கான சான்று பெறுவதற்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது தலைமை காவலர் கோபி அடிக்கடி மருத்துவ விடுப்பில் பணிக்கு சென்று விட்டு பணிக்கு வருவதில்லை என்றும், அப்படியே பணிக்கு வந்தால் அவர் மது பாதையில் இருப்பார் எனவும், இவர் மீது ஏற்கெனெவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. அவர் ஆயுதப்படை பெண் காவலர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.


இப்போது, பயிற்சி வகுப்பில் மதுபோதையில் இருந்ததுடன் பெண் காவல் ஆய்வாளரிடம் அநாகரீகமாக பேசி நடந்துகொண்டுள்ளார் என சக காவலர்கள் கூறுகின்றனர். மேலும் குடிபோதையில் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் அட்ரசிட்டி செய்த காட்பாடி தலைமை காவலர் கோபியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.