வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 23 லட்சத்து 42 ஆயிரத்து 150 ரூபாய் பணம் சிக்கியது

 

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த இரண்டு மாத காலமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம், ஓசூர் போக்குவரத்து சோதனைச் சாவடி, நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். இதேபோன்று கடந்த அக்டோபர் நான்காம் தேதி திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.



இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு  விதை நெல் வழங்கும் திட்டத்தில் போலி ஆவணங்களை தயாரித்த அதிகாரிகள், அதை தனியாரிடம் விற்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விவசாயிகள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கொடுத்ததின் பெயரில் நேற்று இரவு திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் 13 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை  காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர் 



அப்பொழுது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 6 வேளாண்மை துறை ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் அனைவரிடமும் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 23 லட்சத்து 42 ஆயிரத்து 150 ரூபாய் பணம் இருந்துள்ளது. உடனடியாக அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இந்த விதையை வேறு யார் யாரிடம் விற்பனை செய்தீர்கள் வேறு யாருக்கு இந்த விஷயத்தில் தொடர்பு உள்ளது என லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்