பாஜக எம் எல் ஏ ஒருவரின் தாய் வாக்கிங் சென்றபோது அவரது காதை அறுத்து காதணியை திருடர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத்தில் வசித்து வருபவர் பாஜக எம் எல் ஏ பிரதீப் சவுத்ரி. இவர் புலாந்த்சர் சதார் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். இவரது 80 வயதான தாயான சந்தோஷ் தேவியும் அவருடனே வசித்து வருகிறார். 80 வயதானாலும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது எம் எல் ஏ அம்மாவின் பழக்கம். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது தேவியை வழிமறித்த இருவர் கையில் கத்தியை வைத்து மூதாட்டியை மிரட்டியுள்ளார். அணிந்திருக்கும் நகையை கொடுக்கும்படியும், குறிப்பாக காதில் அணிந்திருந்த காதணியை கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.




திருடர்களை கண்டதும் தேவி கூட்டலிட்டுள்ளார். திடீரென கூச்சலிட்டதால் பதட்டமடைந்த திருடர்கள் தேவியை தள்ளிவிட்டு காதில் இருந்த காதணியை திருட முயற்சித்துள்ளனர். ஆனால் அது கையோடு வராததால் காதில் ஓரத்தை கத்தியால் வெட்டி காதணியை எடுத்துச் சென்றுள்ளனர். காதை வெட்டியதால் வலியால் அலறியுள்ளார் தேவி. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடுவர பைக்கில் வந்த திருடர்களும் தப்பித்துச் சென்றுள்ளனர். இரு காதிலும் ரத்தம் வடிய வலியால் துடித்த தேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


உடனடியாக கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சில சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் காஸிபாத்தின் விஜயநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலேயே நடந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து பேசிய எம்.எல்.ஏ.வின் சகோதரர் ஜீட்பல், ''அம்மா தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். அப்படி வாக்கிங் செல்லும்போதுதான் இருவர் பைக்கில் வந்து அம்மாவிடம் பேச்சுக்கொடுத்துள்ளனர். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி காதணியை மிரட்டி கேட்டுள்ளனர். அம்மா கூச்சலிடவும் திருடர்கள் காதை ஓரமாக வெட்டிவிட்டு நகையை எடுத்துச் சென்றுள்ளனர்’’ என்றார்.


இதேபோல் ஒரு சம்பவம் கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலையில் நடந்தேறியது. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுசிலா என்ற  70 வயது மூதாட்டியை காதில் இருந்த 4கிராம் கம்மலுக்காக மர்ம நபர்கள் கொலை செய்தனர். மூதாட்டியின் காதும் அறுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மூதாட்டி இறந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 3 நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் சுசீலா விறகு வெட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சுற்றித்திரிந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மூன்றுபேரும் மூதாட்டியின் கம்மலை பறிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த போராட்டத்தில் மூதாட்டி காயமடைந்து இறந்துள்ளார். பின்னர் காதை அறுத்து சிறுவர்கள் கம்மலை எடுத்துச் சென்றுள்ளனர். 


Crime: கணவனை வைத்து ஸ்கெட்ச் போட்ட களவாணி மனைவி! உஷாரான இளம்பெண்! - அதிரடி காட்டிய போலீஸ்