உத்தரபிரதேசத்தில் மருமகள் வீட்டில் வரதட்சணை கொடுக்காததால் மாமியார் கட்டாயப்படுத்தி மருமகளை ஆசிட் குடிக்க வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். 


உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பித்ரி செயின்பூர் காவல் நிலையப் பகுதியில் கடந்த வியாழன் அன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இறந்த மணமகளின் பெயர் அஞ்சும். 6 ஆண்டுகளுக்கு முன்பு, உதலா ஜாகிர் கிராமத்தைச் சேர்ந்த இலியாஸ் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதில் இருந்து, பணம் கேட்டு அஞ்சகத்திடம் மணமகனின் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். 


இரண்டு வாரங்களுக்கு முன்பு அக்கா, எங்கள் வீட்டுக்கு வந்ததாக அஞ்சகத்தின் சகோதரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ என் மாமியார் பணம் கேட்டு தொடர்ந்து சித்ரவதை செய்கிறார். அவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பணமும், ஒரு காரும் வேண்டுமாம் என்று அவரது தந்தையிடம் தெரிவித்து தனது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். 


இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 21ம் தேதி அஞ்சகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரது தந்தை மற்றும் வீட்டாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் வீட்டார், அஞ்சகத்தை அனுமதித்திருந்த மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும், அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


இந்தநிலையில், அஞ்சகம் இறப்பதற்கு முன்பு நீதிபதியிடம் கடைசியாக மரண வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “ எனது தந்தையால் எனது மாமியார் மற்றும் கணவர் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த என் மாமியார், கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியாத நீ எதற்கு? உயிரோடு இருந்து என்ன சாதிக்க போகிறாய் என்று தெரிவித்து என் வாயில் ஆசிட் ஊற்ற முயற்சி செய்தார். முதலில் நான் குடிக்கமாட்டேன் என்று தடுத்து விட்டேன். இருப்பினும் கட்டாயப்படுத்தி என் வாயில் ஆசிட்டை ஊற்றிவிட்டனர்.” என்று தெரிவித்தார். 


அஞ்சகம் உயிரிழந்தையடுத்து அவரது பெற்றோர்கள் அவரது கணவர் மற்றும் மாமியார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். அந்த எஃப்ஐஆர் பித்ரி செயின்பூர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து பரேலி காவல் கண்காணிப்பாளர் (கிராமப்புற) ராஜ்குமார் அகர்வால் கூறுகையில், "இது மிகவும் தீவிரமான விஷயம், மேலும் இவ்விவகாரம் இரு காவல் நிலையங்களும் இணைந்து விசாரித்து வருகின்றன" என்றார்.


பெண்களுக்கு எதிரான வன்முறைகள்:


கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும். 


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது. 


டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,982 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 19 பெருநகரங்களில் உள்ள மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 43,414 ஆகும்.


2021 இல், தேசிய தலைநகரில் 136 வரதட்சணை மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 19 பெருநகரங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 36.26 சதவீதமாகும். அனைத்து பெருநகரங்களிலும் மொத்தம் 8,664 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில், பெண்கள் கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பாக 3,948 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.


2021 ஆம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் 1,357 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 833 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது பெருநகரங்களில் மிக அதிகமாகும்.