திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருக்கு ராஜா (வயது 45), நிர்மல், சதீஸ் ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகனான ராஜா லால்குடி கிளை சிறையில் முதல்நிலை காவலராக உள்ளார். ராஜாவுக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 25-ந்தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் 2 தரப்பினரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ராஜாவின் மனைவி விஜயா, நிர்மலின் மனைவி ஜெனித்தா ஜாக்குலின் ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து 2 தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியன் விசாரணை நடத்தி மனு ரசீது வழங்கியுள்ளார். இந்த நிலையில் ராஜா, நிர்மல் இடையே நேற்று மதியம் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக ராஜா மீண்டும் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தார். இதனிடையே போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி ராஜா போலீஸ் நிலையம் முன்பு நின்று தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ அவரது உடலில் பற்றி எரிந்ததால் அலறி துடித்தார். இதனைக் கண்ட போலீசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிக்சைக்குபின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தார்.




மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லால்குடி போலீஸ் நிலையம் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைகாவல் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்சொழியன் முறையாக விசாரணை செய்யவில்லை என்று நேற்து தீக்குளித்த ராஜா புகார் தெரிவித்திருந்த நிலையில், திருச்சி சரக்கு டிஐஜி சரவண சுந்தர் எஸ்.ஐ பொற்செழியனை  சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.  மேலும் ராஜா அவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண