திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள விழுதுபட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் வயது (19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று சக்திவேல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு அந்த சிறுவனும் வந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, சிறுவன் அங்கிருந்து தப்பியோடினான்.


 


 




 


இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்கொடுக்கானூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலையான சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமான இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




 


திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). டெய்லரான இவர், திருவண்ணாமலையில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நாள்தோறும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி, இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு ஆறுமுகம் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.


 


 




தாமரை நகரில் உள்ள ஹவுசிங் போர்டு அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள், ஆறுமுகத்தை மறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார், கொலையான ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.