நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள களக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி. இவருக்கு லெட்சுமி என்ற மனைவியும், பாலகிருஷ்ணன் என்ற பாலா(வயது 30) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பால்சாமி இறந்துவிட்ட நிலையில், பாலிடெக்னிக் படித்து முடித்திருந்த பாலகிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அப்பகுதியில் மடத்தூர் சாலையில் உள்ள அய்யனார் சாஸ்தா கோவில் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பாலகிருஷ்ணன் உடல் அருகே கத்தி ஒன்று கிடந்தது. கோவில் முன்பு பத்தி, சூடம் உள்ளிட்டவை ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பாலகிருஷ்ணன் வந்து கோவில் முன்பு இறங்கியதும், அவர் கையில் ஒரு பை கொண்டு வந்ததும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து அவர் கோவிலுக்குள் செல்லும் காட்சிகள் வரை அதில் தெளிவாக தெரிந்தது.




மேற்கொண்டு உள்ள காட்சிகள் அந்த கேமிராவில் பதிவாகவில்லை. இறந்து போன பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்த தடயங்களை பார்க்கும்போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்த முழுவிவரமும் தெரியவரும். இதனிடையே அவர் நள்ளிரவில் எதற்காக கோவிலுக்கு வந்தார்? என்ன பிரச்சினை? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோவிலுக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060