தேனியில் பெண் போல் நடித்து குறுஞ்செய்தி மூலம் 3.5 லட்சம் மோசடி - நைஜீரியாவை சேர்ந்த நபர் கைது

’’புனேயில் இருந்து  3.5 லட்சத்துக்கு 2 லிட்டர் மருந்து மூலப்பொருள் எண்ணெய் முன்பதிவு செய்து டெல்லிக்கு சென்று கொடுத்துள்ளார்’’

Continues below advertisement

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள கருங்கட்டான் குலத்தைச் சேர்ந்தவர் ரிதம்பர நந்தா ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு பெண்ணின் பெயரில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதன் மூலம் அறிமுகமான பெண். தான் இங்கிலாந்தில் ஒரு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மருந்து கொள்முதல் மேலாளராக இருப்பதாக அறிமுகம் ஆகி உள்ளார். மேலும் அவர் புனே நாட்டில் டாக்டர் கருணா என்பவரிடம் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கும் மூலப் பொருளாக பயன்படுத்தும் எண்ணெய் இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement


அதில் 2 லிட்டர் கொள்முதல் செய்து டெல்லியில் தர பரிசோதனை செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்ட ஹரிசன் என்பவரிடம் கொடுத்தால் அவர் ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்வதற்கான முன்பதிவு, அதற்கான பங்கு தொகையும் கொடுப்பார் என அந்த பெண் ஆசைவார்த்தை கூறினார். இதன் மூலம் கிடைக்கும் பங்கு தொகையில் நல்ல வருமானம் கிடைக்கும் எனக் கூறிய அந்த பெண் ரிதம்பர நந்தாவை சம்மதிக்க வைத்துள்ளார்.  இதனை நம்பிய ரிதம்பர நந்தா, புனேயில் இருந்து  3.5 லட்சத்துக்கு 2 லிட்டர் மருந்து மூலப்பொருள் எண்ணெய் முன்பதிவு செய்தார். அவருக்கு கொரியர் மூலம் அந்த எண்ணெய் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அதை பெற்றுக் கொண்டு டெல்லிக்கு நேரில் சென்று  ஹரிசனிடம் கொடுத்துள்ளார்.


ஆனால் அவர் 23 லிட்டர் கொண்டுவந்தால் தான் ஆயிரம் லிட்டர் இதற்கான முன்பதிவு மற்றும் பங்குத் தொகையை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இதனால் அவர் தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறி அங்கிருந்து திரும்பி வந்துள்ளார். இதன் பின்னர் வாட்ஸப்பில் தொடர்பு கொண்ட நபருக்கு மீண்டும் தொடர்பு கொண்டபோது அந்த எண்ணிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஹரிசன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுவாமி ரிதம்பரநந்தா, தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த நபர், பெண்ணின் பெயரில் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிய வந்தது. மேலும் அவர் மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கிழக்கு நளசுபரா பகுதியில் வசித்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் தற்போது மும்பையில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.  இதையடுத்து தேனியில் இருந்து தனிப்படையினர் மும்பை விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த ஒலாடியன் மேத்யூ (43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மடிக்கணினி, 4 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கைதான ஒலாடியன் மேத்யூவை போலீசார் தேனிக்கு  அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த மோசடியின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

நிர்வாணமாக தெரியும் மூக்கு கண்ணாடியை விற்பதாக கூறி மோசடி - ஒருவர் கைது; மற்றொருவர் ஓட்டம்

 

Continues below advertisement
Sponsored Links by Taboola