திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். கடந்த 2017ம் ஆண்டு இவர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சிறுமியின் தாய் உணவு வாங்க வெளியே சென்றிருந்தபோது பிரகாஷ் இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளார். சிறுமியின் தாய் திரும்பி வந்து பார்த்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லத் தெரியாமல் அந்த இரண்டரை வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனால், பதறிப்போன தாய் குழந்தையின் அழுகைக்கு காரணம் என்னவென்று தெரியாமல் குழம்பியுள்ளார். பின்னர், குழந்தையின் ஆடைகள் மற்றும் உடலை பரிசோதித்த பிறகுதான், தனது மகளுக்கு நேர்ந்த கொடூரத்தை உணர்ந்து மனம் உடைந்துள்ளார்.


உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த அந்த தாய், சிறுமியின் நிலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், காவல்துறையின் உறுதி செய்யப்பட்ட தகவல் அறிக்கையில், இரண்டரை வயது குழந்தையின் பிறப்பிறப்பில் இவிந்தணு இருந்தது என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தனர்.




விந்தணு என்பதை ஆங்கிலத்தில் செமன்(seman) என்று குறிப்பிடுவர். ஆனால், காவல்துறையின் உறுதி செய்யப்பட்ட தகவல் அறிக்கையில் செமன் (semen) என்பதற்கு பதிலாக (semman) செம்மண் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரே ஒரு எழுத்துப்பிழையால், நீதிமன்றத்தில் செமன் என்பது இரண்டரை வயது சிறுமியின் உடலிலும், ஆடையிலும் செம்மண் கறை படிந்திருந்ததாக எடுத்துக்கொள்ளப்பட்டது. குழந்தை விளையாடும்போது இந்த செம்மண் கறை படிந்ததாக எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், குற்றவாளியான பிரகாஷையும் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.


இதனால், குற்றவாளி பிரகாஷிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேல்முருகன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிகள் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகளை பயன்படுத்தி தப்பிவிடுகின்றனர். துரதிஷ்டவசமாக விசாரணைப்பிரிவு கூட இல்லை.




விசாரணை நீதிமன்றம் அவர்கள் விருப்பப்படி செயல்படுகின்றனர். சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதமாக வழங்கிவிட்டனர். ஆனால், இதுபோன்ற வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களுக்கு பெரியளவில் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. விசாரணை அதிகாரிகள் இன்னும் அதிகமான கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தணடனை அபராதம் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்வாதாரம் கருதி ரூபாய் 1 லட்சத்தை அரசாங்கம் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கவும் உத்தரவிட்டார்.  


ஏட்டு ஒருவர் எழுதிய பதிவு, இந்த அளவிற்கு வழக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு பிழை, பெரிய கொலையை கூட மாற்றிவிடும் என்பதற்கு இந்த வழக்கும் உதாரணம்.