திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லீலாவதி நகர் அக்கரை புதுத் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர், கூத்தாநல்லூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக இருக்கிறார். இவரின் மகன் சூர்யா என்கிற ரகுவிற்கும் நன்னிலம் அருகே உள்ள பில்லூரைச் சேர்ந்த குமாரசாமி மகள் காளியம்மாளுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 




இந்தநிலையில், காளியம்மாளுக்கும் அவரது மாமனார் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி, லலிதா ஆகியோருக்கும் இடையே அடிக்கடி வீடு சம்பந்தமாக அடிக்கடி  சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து காளியம்மாள் வீட்டார் சமாதானம் பேசி ரவிக்கு சொந்தமான அந்த மாடி வீட்டை இரண்டாக  தடுத்து முன் பக்கத்தில் காளியம்மாளும் அவரது கணவரும் தங்கியுள்ளனர். பின்பக்கத்தில் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி, லலிதா ஆகியோரும் தங்கியுள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை காளியம்மாளுக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே வீடு சம்பந்தமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காளியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  காளியம்மாள் தனது அண்ணன் முருகேசனிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றும் கூறியுள்ளார். 




முருகேசன் நேரில் வந்து பேசிக் கொள்வதாக காளிம்மாளிடம் கூறியுள்ளார். இருப்பினும் காளியம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காளியம்மாள்  உயிரிழந்தார். இதனை அடுத்து காளியம்மாள் அண்ணன் முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற் கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் காளியம்மாளுக்கு திருமணம் நடந்து நான்கு வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறவிருக்கிறது. காளியம்மாள் இறப்பிற்கு காரணமான ரவி, சுமதி, லலிதா ஆகியோரை கைது செய்தால்தான் உடலை பெற்றுக்கொள்வோம் என உறவினர்கள் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளனர்.


இந்த பதட்டமான சூழல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற உயிரிழந்த காளியம்மாள் உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண