தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் வேணுகோபால் பாண்டியன்(55). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு 16 வயதில் ரோஷிதா என்ற மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். வேணுகோபால் பாண்டியன் பழனிசெட்டிபட்டியில் பழைய இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு எட்டு மணி அளவில் வாசவி காலனியில் இருந்து ஆஞ்சநேயர் நகர் செல்லும் பாதையில் வேணுகோபால் பாண்டியன் தலையில் பலத்த காயங்களுடன் நடுரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். அருகில் இவரது ஸ்கூட்டரும் விழுந்து கிடந்ததால், ஸ்கூட்டரில் செல்லும்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டதாக கருதி அப்பகுதியில் உள்ளோர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர்.


பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது, அவரது தலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்டது தெரிய வந்தது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக அவரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.




பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர். அப்போது அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஒரு சிலர் அவரை பின்தொடர்வது தெரிய வந்தது.


மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கேட்பாரற்று ஒரு இருசக்கர வாகனமும் கிடந்துள்ளது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். காவல்துறையினரின் விசாரணையில் வேணுகோபால் பாண்டியனின் மகளான ரோஷிதா பெரியகுளத்தைச் சேர்ந்த முத்துகாமாட்சி என்ற வாழவந்தானை(24) காதலிக்கும் விவகாரம் தெரிய வந்தது. இது தொடர்பாக வாழவந்தானை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரும் அவரது நண்பர்களான பெரியகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார்(23) மற்றும் கண்ணப்பன் (22) ஆகியோர் திட்டமிட்டு வேணுகோபால் பாண்டியனை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளி அரிவாளால் வெட்டியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.




வேணுகோபால் பாண்டியனின் மகளான ரோஷிதா கடந்த ஆண்டு தேனியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், காதல் விவகாரம் காரணமாக அவரை வேணுகோபால் பாண்டியன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வேணுகோபால் பாண்டியனின் தாயார் பாண்டியம்மாள் தனது மகனை கண்டித்ததுடன் பேத்தியான ரோஷிதாவை அழைத்துக்கொண்டு வைகை அணை அருகே உள்ள ரோஷிதாவின் தாய் வழி பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.


அங்கு சிறிது காலம் இருந்த பின்னர் பாண்டியம்மாளின் தங்கையான பாண்டீஸ்வரி வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு மாத காலம் தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பேத்தியை அழைத்துக்கொண்டு பெரியகுளத்தில் உள்ள தனது இளைய மகன் ஜெயராம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு தங்க வைத்துள்ளார். வேணுகோபால் பாண்டியனும் அவரது மனைவி உமாமகேஸ்வரியும் பெரியகுளம் சென்று படிப்பு பாழாகிறது என்று கூறி தங்களுடன் வருமாறு மகளை அழைத்தபோது ரோஷிதா வர மறுத்துவிட்டார்.


இந்த நிலையில், ரோஷிதாவிற்கும் , முத்துக்காமாட்சி என்கிற வாழவந்தானுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்த வேணுகோபால் பாண்டியனும், உமாமகேஸ்வரியும்  வாழ வந்தானை நேரில் சந்தித்து கடுமையாக எச்சரித்துள்ளனர். இருந்த போதும் ரோஷிதாவும் வாழவந்தானும் மிகவும் நெருங்கி பழகியுள்ளனர். மேலும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று தங்கி வந்துள்ளனர். வேணுகோபால் பாண்டியன் இந்த இருவரையும் எச்சரித்து வந்த நிலையில், கடந்த வாரம்  வாழவந்தானும், ரோஷிதாவும் இணைந்து காதலுக்கு இடையூறாக உள்ள  வேணுகோபால் பாண்டியனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த வாரம் வேணுகோபால் பாண்டியன் வாசவி காலனி வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் தயாராக காத்திருந்த வாழ வந்தான், இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று அவரை இடித்து தள்ள முயன்றுள்ளார்.




அப்போது அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அவரது நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க முடிவு செய்த ரோஷிதாவும், வாழவந்தானும் தீட்டிய திட்டப்படி பெரியகுளத்தில் இருந்து பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு ரோஷிதா வந்தார். இனிமேல் தான் தந்தையின் சொல்படி கேட்டு நடப்பதாகவும், தனது படிப்பு வீணாகி வருகிறது. இதனால் தன்னை தேனியில் உள்ள பள்ளியில் சேர்த்து விடுமாறும் தந்தையிடம் ரோஷிதா கூறியுள்ளார். தான் பலமுறை கெஞ்சியும் வராத மகள்,தற்போது மனமாற்றம் ஏற்பட்டு தன்னிடம் திரும்பி வந்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்த வேணுகோபால் பாண்டியன் அவரை பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டுள்ளார்.


தாய்- தந்தைக்குத் தெரியாமல் ரோஷிதா மொபைல் போனை பயன்படுத்தி காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனக்கு "ஷாக்ஸ்"வாங்கி வருமாறு தந்தையை கடைக்கு அனுப்பி வைத்தார் ரோஷிதா. தனது தந்தை கடைக்கு செல்வது மற்றும் திரும்ப வருவது குறித்த தகவல்களை தனது காதலனான வாழவந்தானுக்கு மொபைல் போன் மூலமாக தகவல் அளித்த வண்ணம் இருந்தார். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் தனது இரண்டு நண்பர்களுடன் தயாராக காத்திருந்த வாழவந்தான் வேணுகோபால் பாண்டியனை பின் தொடர்ந்து வந்து, ஆள்அரவமற்ற இருட்டான பகுதிக்கு வந்தவுடன் அவரை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். வெட்டி முடித்ததும் மூவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.


அங்கிருந்து நடந்த விவரங்களை ரோஷிதாவிற்கு போன் மூலம் தெரிவித்தனர் என்கிற தகவலைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தனது தந்தையை கொலை செய்வதற்காக வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து ரோஷிதா காதலனிடம் கொடுத்ததாகக் கூறப்படும் விவரமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து ரோஷிதாவும் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார். ரோஷிதா உட்பட நான்கு பேர் மீதும் IPC 109, IPC 324, IPC 307 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




 ரோஷிதா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேணுகோபால் பாண்டியன் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரோஷிதாவின் காதலனான முத்துக்காமாட்சி என்கிற வாழவந்தான் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன, பலமுறை சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் விவகாரம் காரணமாக காதலுக்கு இடையூறாக இருந்த தனது தந்தையை மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.