கரூரை அடுத்த தாந்தோணிமலை பகுதியில் அமைந்துள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேல் (55). இவர் அதே பகுதியில் பழைய இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு குஜிலியம்பாறை பகுதியில் உறவினர் வீட்டு காதணி விழாவிற்காக சென்றுள்ளார்.




நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பக்க கதவு நீக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி 100 கிராம் திருடு போனது  கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர் வழக்கமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முன்பக்க கதவுக்கு மேல்புறம் உள்ள மின்சார பெட்டிக்கு மேலே சாவியை வைத்து செல்வது வழக்கம். 



 


இன்றும் அதேபோல் சாவியை வைத்து சென்றதால் திருட வந்த திருடனுக்கு சாவியே உதவியது. சாவியின் உதவியுடன் மிகவும் சுலபமாக  திருட்டை மேற்கொள்ள அங்கிருந்த சாவி உதவியுள்ளது. சாவி உதவியுடன் திருடன் கதவுகளை சேதப்படுத்தாமல் திருடி சென்றுள்ளான். சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் தாந்தோணிமலை காவல் நிலைய போலீசாருக்கு  தகவல் அளித்ததன் பேரில், தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து கைரேகை நிருபருடன் சோதனை நடத்தி வருகின்றனர். 




கரூர் அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.