கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நர்மதா வயது (26). இவர்களுக்கு நித்திஷ் வயது (6), சித்தார்த்தா வயது (4) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்தநிலையில் நர்மதாவுக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வினோத்குமார் தனியார் வங்கி ஒன்றில் நிதி வசூல் செய்யும் வேலை செய்து வந்துள்ளார். நர்மதாவுக்கும், வினோத்குமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


 




 


இதைத்தொடர்ந்து நர்மதாவும், வினோத்குமாரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் நர்மதா வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால் செய்யாறு அருகே உள்ள ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வினோத்குமார் நர்மாதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மேலும் வினோத்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் குடித்து விட்டு அடிக்கடி நர்மதாவிடம் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.


அதனைத்தொடர்ந்து நர்மதா நேற்று (14 .02.2022) வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் குழந்தைகள் இருவரும் வினோத்குமாருடன் இருந்துள்ளனர். மாலையில் நர்மதா வேலை முடிந்து வீடு திரும்பியபோது மகன் சித்தார்த்தா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனை கண்டு அவர் கதறி அழுத சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் நர்மதா வீட்டிற்கு வந்து பார்த்தனர்.


 




 


அப்போது ரத்தவெள்ளத்தில் இருந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மாமண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நர்மதா உடனடியாக தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தூசி காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை முதல் கட்ட விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் வினோத்குமார் சித்தார்த்தாவை இரண்டு கால்களையும் பிடித்து சுழற்றி சுவரில் அடித்து கொடூரமான முறையில் கொன்றது தெரியவந்தது.


இதனையடுத்து காவல்துறையினர் 4 வயது சிறுவனை அடித்து கொன்ற வினோத்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெற்ற மகனே இட்லி மாவில் விஷம் கலந்து தாய் தந்தையை கொலை செய்ய முயற்சி