திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோரை இழந்த நிலையில் லால்குடி அருகே ஒரு கிராமத்தில் பெரியம்மா அரவணைப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அன்பில் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று 18 வயது என கூறி கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் வயதில் சந்தேகம் ஏற்படவே லால்குடி மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் மாலதி மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் விசாரணையில் வயதை அதிகமாக கூறி கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. அதன்பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளை கோவில் அருகே ஒரு தனியார் அட்டை கம்பெனியில் பணியில் ஈடுபட்டபோது, ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அதனால் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறினார். சிறுமி கூறிய தகவலின் பேரில் காவல்துறையினர் வாலிபரை தேடிவந்தனர்.




இந்தநிலையில், அந்த சிறுமி கூறிய தகவலில் சந்தேகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலர் காவல்நிலையத்தில்  புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுமியிடம் மீண்டும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லக்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவர், தன்னை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கர்ப்பத்துக்கு அவர்தான் காரணம் என்றும், இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால் தான் வேறு ஒருவரது பெயரை கூறியதாகவும் சிறுமி காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்பேரில் காவல்துறையினர் பிரகாஷின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையை சேர்ந்த பிரகாஷ் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். போலீஸ்காரர் சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண