தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த  தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த கடந்த 2020-ம் வருடம் ஜூன் 19-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 


இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது நேற்று மதுரை மாவட்ட  முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனை செவிலியரான கிருபை திரேனப்பு  நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார். 




அப்போது  தந்தை மகன் இருவரும் காவல்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது இருவரின் உடலில் இருந்த காயங்களின்தன்மை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும், ரத்தக்காயங்கள் மற்றும் ரத்த உரைதல் நிலையில் இருந்ததால் அதற்கான ஊசி செலுத்தியது தொடர்பாகவும் சாட்சியம் அளித்தார். ஏன் இது குறித்து எதுவும் ஏன் அப்போது டாக்டரிடம் தெரிவிக்கவில்லை எனக் கேட்டதற்கு, இவர்களைப்போல சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து பலர் காயங்களுடன் வருவார்கள். அதுமட்டுமின்றி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் அருகே இரண்டு போலீஸார் நின்றுகொண்டே இருந்தனர். அதனால் எதுவும் தெரிவிக்கமுடியவில்லை என்றார்.


வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பத்மநாபன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



அன்றைய தினம் வழக்கின் மற்றொரு சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தந்தை மகன் இருவருக்கும் ஊசி செலுத்திய செவிலியரிடம் சாட்சிய விசாரணை நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜின் நண்பர்கள் உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.