மதுரையைச் சேர்ந்த பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ். இவரை குன்னூர் அருகே ஹெலிகாப்டரில் சென்ற முப்படை தலைமை தளபதி பிவின் ராவத் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக, தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் மீண்டும் அவரை வேறு ஒரு வழக்கில் இன்று காவல்துறையினர் கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.




கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொள்ள பல இஸ்லாமியர்கள் சென்றிருந்தனர். அந்த மாநாட்டிற்கு சென்று வந்த இஸ்லாமியர்களால்தான் தமிழகத்தில் கொரோனா பரவியது என்றும், முஸ்லீம் + தீவிரவாதம் = தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில் கடந்த ஆண்டு யூட்யூபில் விவாதம் ஒன்றையும் நடத்தினார். இந்தியாவில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என்று அவதூறாகவும், முஸ்லிம்களுக்கெதிராக வெறுப்பை தூண்டும் வகையிலும், சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்படும் வகையில் கடந்த 2020 வருடம் ஏப்ரல் 2ம்  தேதி மாரிதாஸ் யூடியூப் சேனலில் பேசியது குறித்து 2020 ஏப்ரல் 4-ஆம் தேதி நெல்லை மேலப்பாளையம் பகுதி தமுமுக சார்பில் தமுமுக நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் அறிவுறுத்தலின்பேரில் மாரிதாஸ் மீது தமுமுக உறுப்பினர் முகம்மது காதர் மீரான் நெல்லை மேலப்பாளையம் காவல்  நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது,  காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 04.04.2020 அன்று 292 A, 295 A, 505 ( 2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  




இந்த நிலையில் தேனி மாவட்ட சிறையில் இருந்த யூடியூபர் மாரிதாஸ் நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்,  இன்று காலை தேனி சிறையில் கைது செய்யப்பட்டு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டார் , நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 5-இல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயலெட்சுமி வருகின்ற 30.12.21 வரை மாரிதாஸை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அந்த அடிப்படையில் யூடியூபர் மாரிதாஸ் தற்போது மீண்டும் தேனி மாவட்ட சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறார்..




மாரிதாஸுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் குற்றாலநாதன் பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறும்பொழுது, ”மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட பொய் வழக்கில் மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே முன் ஜாமீன் வழங்கி உள்ளது, கொரோனா கால கட்டம் என்பதால் அவரால் ஜாமீன்தார் காட்ட முடியாத காரணத்தால் ஒன்றரை வருடங்களுக்கு பின்பு தமிழக காவல்துறை தமிழக அரசின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு மாரிதாஸை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர், இது சட்ட விரோதமானது, இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளோம். இது முழுக்க முழுக்க தமிழக அரசின் பழிவாங்கும் செயல், வேறு ஒரு வழக்கில் மாரிதாஸ் மீது போட்டப்பட்ட பொய் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ள நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வேறு ஒரு வழக்கில் ஒன்றரை ஆண்டுக்கு பின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளனர்.


தமிழக அரசு செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டுவதை பொறுத்துக்  கொள்ள முடியாத தமிழக அரசு மேலும் மேலும் அவர் மீது வழக்குகளை போட்டு சித்ரவதை செய்வதற்கு இந்த வழக்குகள் போடப்பட்டு வருகின்றன” என பேசினார்.