வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்துள்ளது.


இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 


கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு அதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. 


இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் ஏராளமானோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இதனிடையே, அவசரம் கருதி தினந்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு மாற்றியது. அதன்படி சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினந்தோறும் நீதிபதிகள் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பாமகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். 


இதையடுத்து வன்னியர்களுக்கான 10.5% உள்இடதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.


அதில் மாநில அரசு புதிதாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனவும், நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறவில்லை எனவும், ஏற்கனவே மிகவும் பிறப்பிடுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இந்த உள்ஒதுக்கீடு என்பது வன்னியர் சமுதாயத்துக்கானது மட்டுமல்ல அதில் 7 பிரிவினருக்கானது கூறப்பட்டுள்ளது. 


மேலும் “மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதி கிடைக்கும் வகையில் தான் இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரணைக கு எடுத்து, எதிர் மனுதாரர்கள் கருத்தை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உடனடியாக  தடை விதிக்க வேண்டும். அதற்கான உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.


இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்திருந்தது. அப்போது, வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. வழக்கு விசாரணை பிப்ரவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் பிப்ரவரி 15 வரை 10.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் புதிய நியமனங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.