தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தன் வீட்டு முன்பு தானே மண்ணெண்ணை பாட்டிலை செய்து வெடிக்க வைத்து நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.


கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சக்கரபாணி (40) கொத்தனார். இந்து முன்னணி மாநகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சக்கரபாணி வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் வாசனையுடன், கண்ணாடி பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தது.


இதை பார்த்த சக்கரபாணியும் அருகில் உள்ளவர்களும் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சக்கரபாணி, தன் வீட்டின் முன் மர்ம நபர்கள் மண்ணெண்ணையை பாட்டிலில் நிரப்பி வீசிச் சென்றதாக புகார் செய்தார்.


இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, ஏடிஎஸ்பிக்கள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன், தடயவியல் துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர் சக்கரபாணி வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த பகுதியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணையை நடத்தினர்.


பின்னர் தஞ்சாவூரிலிருந்து மோப்ப நாய் டாபி வரவழைக்கப்பட்டு துப்பறியப்பட்டது, அந்த நாய் சிறிது தூரம் மட்டுமே ஓடியது. மேலும், அங்கு உடைந்து கிடந்த பாட்டிலை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து அதன் கைரேகைகளை சோதனை நடத்தினர்.


சக்கரபாணி வீட்டுக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சதீஷ்குமார் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதனால் கும்பகோணம் பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதையடுத்து சக்கரபாணியை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.


இந்த விசாரணையில், மண்ணெண்ணை நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில் தூரத்திலிருந்து வீசப்பட்டால் அவை சிதறிய நிலையில் காணப்படும். ஆனால் தெருவில் உடைந்த பாட்டில் சிதறாமல் ஒரே இடத்தில் உடைந்து கிடந்ததால் போலீசாருக்கு முதல் சந்தேகம் எழுந்தது. மேலும், கும்பகோணம் பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகளில் உள்ளவர்கள் செயல்பாடுகளோடு சக்கரபாணியை ஒப்பிடும்போது இவரது செயல்பாடுகள் ஏதும் குறிப்பிடும்படியாக இல்லை.


தனிப்பட்ட நபர்களின் வெறுப்பும் ஏதும் இல்லை என சக்கரபாணி கூறியது மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதையடுத்து போலீசாரின் விசாரணை பார்வை மாறியது. மேலும் பாட்டிலில் இருந்த எரிந்த திரியின் துணி சக்கரபாணி வீட்டில் இருந்த போர்வையிலிருந்து கிழிக்கப்பட்டதும் தெரியவந்தது. சக்கரபாணி, அவரது மனைவியிடம் போலீஸார் தனித்தனியாக விசாரித்த போது இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.


அதாவது தனக்கு தனிப்பட்ட முறையில் விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதால் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்ததாக சக்கரபாணி ஒப்புக் கொண்டுள்ளனர். இவை அனைத்து போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. மேலும், இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் இந்திய குற்றவியல் சட்டம் 436-ன் (வெடிபொருளால் கட்டிடத்தை சேதப்படுத்த முயற்சி) கீழ் வழக்குப்பதிவு செய்து சக்கரபாணியை போலீசார் கைது செய்தனர்.