விழுப்புரம் : திண்டிவனம் மேம்பாலம் அருகே அரசு பேருந்து முன் பக்கம் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தால் திடீர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் திண்டிவனத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வ.உ.சி திடலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கம் மற்றும் பட்ஜெட் விளக்கம் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மைனாரிட்டி மோட்சா தேசிய தலைவர் வேலூர் சையது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக வலைத்தளங்களில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை இழிவாக பேசிய எச்.ராஜாவை திண்டிவனம் வராதே. திரும்பி செல். இல்லையேல் திருமா திசை நோக்கி மண்டியிட்டு மன்னிப்பு கேள். என்ற வாசகத்துடன் போஸ்டர் பதிவிடப்பட்டிருந்தது.


அதேபோல் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சேரன் சமூக வலைத்தளத்தில் இன்று பொதுக்கூட்டத்திற்கு திண்டிவனம் வருகின்ற எச்.ராஜாவிற்கு திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதி அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பதிவிட்டிருந்தார். இதனால் திண்டிவனம் நகரத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் பெரும்பான்மையான போலீசாரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் இன்று காலை குவிக்கப்பட்டனர்.


இந்த நிலையில் இன்று காலை திண்டிவனம் மேம்பாலம் அருகே சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற TN 32 N 4450 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்து முன் பக்க கண்ணாடியை இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து கண்ணாடி உடைப்பில் ஈடுபட்ட இரு நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.