தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கனகராஜ்(25). கூலித் தொழில் செய்து வருகிறார். குருக்கள்பட்டி அருகே உள்ள கருத்தானூரை சேர்ந்த மங்கள்ராஜ் மகள் கவிக்குயில்(22) கனகராஜின் சொந்த அத்தை மகள் ஆவார். இவர்கள் இவருக்கும்

  கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் ஊருக்கு வெளிப்புறம் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.


திருமணத்தை மீறிய உறவு:


இந்த நிலையில் கனகராஜின் மனைவி கவிக்குயில் திருமணத்திற்கு முன்னர் பக்கத்து ஊரான மலையான்குளத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் வெங்கடேஷ்(24) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் கவிக்குயில் கனகராஜை திருமணம் செய்தாலும் வெங்கடேசுடனும் தொடர்ந்து பேசி வந்ததாகவும் தெரிகிறது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.


இந்த நிலையில் நேற்று கணவர் கனகராஜ் வேலைக்கு செல்லும் நேரத்தில் வெங்கடேஷை வீட்டிற்கு அழைத்து கவிக்குயில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை பார்த்த கனகராஜின் தந்தை நடராஜன் அதிர்ச்சியடைந்து இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் வேலைக்கு சென்ற கனகராஜிடம் நடந்ததை கூறி வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.


சரமாரி வெட்டு:


தொடர்ந்து கவிக்குயிலின் அம்மா முத்துமாரி(50), அண்ணன் அன்பரசு(25) ஆகியோரையும் வரவழைத்து வெங்கடேஷை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே அங்கு இருந்த அரிவாளை கொண்டு அன்பரசு வெங்கடேஷை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து போன வெங்கடேஷ் இடது கை மணிக்கட்டு துண்டாக வெட்டுப்பட்டு கீழே விழுந்தது. மேலும் விரல்கள், முகம் ஆகியவற்றில் வெட்டிவிட்டு அன்பரசு மற்றும் கனகராஜ் அங்கிருந்து தப்பியோடினர்.


தற்கொலை முயற்சி:


இந்த சூழலில் தனது காதலன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை  கண்ட கவிக்குயில் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கிணற்றில் சுமார் 5 அடியில் தண்ணீர் இருந்ததால் லேசான காயங்களுடன் கவிக்குயில் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும் கிணற்றின் உள்ளே கிடந்த கவிக்குயிலை தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கனகராஜ், அன்பரசு, நடராஜன் மற்றும் முத்துமாரி ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் முடிந்த தனது முன்னாள் காதலியை சந்தித்து தனிமையில் இருந்த நிலையில் காதலியின் கணவர் அவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர457821


யூடியூபில் வீடியோக்களை காண021