திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் தோட்டத்துவீட்டில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் பழனியை அடுத்த வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (52). விவசாயம் செய்து வரும் இவருக்கு வளர்மதி (45) என்கிற மனைவியும் சிவரஞ்சனி (21) என்ற மகளும், கார்த்திகேயன் (18) என்ற மகனும் உள்ளனர். மகன் மற்றும் மகள் இருவருமே கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பழனி தீயணைப்பு படையினருக்கு மக்காச் சோளத் தட்டை தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புப்படை வீரர்கள் தீயை அணைக்க முயன்ற பொழுது மக்காச் சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில் சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஆயக்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்


உயிரிழந்த தந்தை மகன்


ம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் முருகேசன் என்ற சின்னராசு, மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி,மகன் கார்த்திகேயன் ஆகியோரது உடல்கள் என தெரியவந்தது.  நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர்.  திடீரென மக்காச்சோள தட்டைக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் ? ஒருவேளை முன் பகை காரணமாக யாராவது இவர்களை கொலை செய்துவிட்டு மக்காசோள தட்டைக்குள் வைத்து எரித்து விட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


தென்மண்டல ஐ.ஜி. அன்பு IPS


 

இதுகுறித்து தென்மண்டல ஐஜி., அன்பு, திண்டுக்கல் சரக டிஐஜி., விஜயகுமாரி,  மாவட்ட எஸ்பி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  எஸ்பி., சீனிவாசன் அளித்த பேட்டியில், வீட்டில் எந்த பொருட்களும் காணாமல் போகவில்லை என்றும் நான்கு பேரும் இறந்தது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே விபரங்கள் தெரியவரும் என்றார்.  கடன் பிரச்சினை இல்லாத நிலையில், இந்த நால்வரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள என்ன காரணம் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ரூபி உதவியுடன் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


உயிரிழந்த தாய் மகள்


சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையில், நால்வரும் உயிரிழந்தது அப்பகுதியினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நால்வரின் உயிரிழப்புக்கான காரணத்தை உடனடியாக போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.