திருவள்ளுர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையிலுள்ள, பெரியபாளையம் ரோடில் ஜோதி (33) என்பவர் ஜே.பி.ஸ்டோர் ஏஜென்சிஸ் என்ற பெயரில் சிட் பண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். ஜோதி என்பவருக்கு, சத்தியமூர்த்தி என்பவருக்கும் சுமார் எட்டு கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வளர்புறம் கிராம  ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வளர்புறம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளரும், பிரபல ரவுடியுமான பிபிஜிடி சங்கர், இந்த பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சத்தியமூர்த்தியிடம்  பணத்தை கேட்டால், உன்னை கொன்று விடுவேன் என சிட் பண்ட் உரிமையாளர் ஜோதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.




இதையடுத்து இதுகுறித்து  சிட் பண்ட் உரிமையாளர் ஜோதி  ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளர் பிபிஜிடி சங்கர்  மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய குற்ற எண்:564/2022 u/s : 420,294(b) 506(!!) IPC ஆகிய மூன்று  பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பி.பி.ஜி.டி சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.




 

பிபிஜி குமரன்

 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள, பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்தவர் பிபிஜி குமரன், படிக்கும் காலத்திலேயே, சாராயம் விற்றுவந்தார். படிப்பை முடித்த பிறகு, புரட்சி பாரதம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். சாராய வியாபாரியாக இருந்து வந்த குமரன் தனது ஆதிக்கத்தின் மூலம் தனியா தொழிற்சாலைகளிலிருந்து ஸ்கிராப் சொல்லப்படும் இரும்புக் கழிவுகளை வாங்கிவிற்கும் பணியை, 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தில் துவங்கினார். படிப்படியாக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் முதலில் சிறு குறு நிறுவனங்கள்  அக்காலத்தில் தான் ஸ்ரீபெரும்புதூரில் அதிதீவிரமாக வளர்ச்சி அடைந்து வந்தது.

 



 

இதனைப் பயன்படுத்தி தன்னை அதிகார மையமாக மாற்றி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.  படிப்படியாக, ஸ்ரீ பெரும்புதூரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில், கழிவுகளை வாங்கி விற்கத் துவங்கினார். பணம் குவியத் துவங்கியது, ரியல் எஸ்டேட் தொழில், கட்ட பஞ்சாயத்து போன்றவற்றில், ஈடுபடத் துவங்கினார். சினிமா துறையின் மீது உள்ள ஆசையால் படம் ஒன்றை தயாரித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பொழுது விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.  இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் அதிமுக இவரை கட்சியில் இருந்து விலகியது.

 



 

பிபிஜி குமரன் கொலை 

 

2011 ஆம் ஆண்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற குமரன் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து அதிமுகவில் போந்தூர் குட்டி ( எ ) வெங்கடேஷ் என்பவரிடம் தோல்வி அடைந்தார். குமார் தன்னை ஏதாவது செய்துவிடுவாரோ என்ற பயத்தில் வெங்கடேஷ், குன்றத்தூர் வைரவன் , போந்தூர் செந்தில் ராஜன் ஆகியோருடன் இணைந்து கூலிப்படையை பயன்படுத்தி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி குமரனை கொலை செய்தார்.



 

பி.பி.ஜி.டி சங்கர். 

 

இந்தளவிற்கு செல்வாக்கான குமரனின் உறவினரான அவர்தான் பி.பி.ஜி.டி சங்கர். சங்கர் மீது ஸ்ரீபெரும்புதூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் 2004–ம் ஆண்டுக்கு முன்பு வரை பி.பி.ஜி.குமரனுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்தார். குமரன் செய்த அனைத்து சமூகவிரோத செயல்களிலும் பங்கு பெற்றார். குமரனை கொலை செய்த வெங்கடேசன் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சங்கர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து தனது குமரனின் பெயரை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வருகிறார்.

 


]

 

பி.பி.ஜி.டி சங்கர் மீது 15 வழக்குகள், மூன்று குற்றப்பத்திரிகையும் தமிழக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி பிரிவு மாநில பொருளாளராகவும் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து வருகிறார். காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா மற்றும் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளராக இருந்துவரும் சுதாகர் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் படப்பை குணாவை தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில்  சிறையில் அடைத்துள்ளனர்.