திருமண உறவில் கணவன்-மனைவி இடையே பிரச்னை வருவது சகஜமான ஒன்று தான். ஆனால் அப்படி வந்த சண்டை நாளடைவில் கணவரை கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. 


தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பிரட் லியோன்(41). இவருக்கும் சுரேதா(32) என்ற பெண்ணிற்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் போஃபோடர் என்ற ஓட்டலை தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் நகரில் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர் திடீரென்று ஒருநாள் தன்னுடைய ஓட்டலில் உள்ள ரிசார்ட் வீட்டில் பிரச்னை ஒன்றை சரி செய்ய சென்றுள்ளார். அதன்பிறகு இவர் வீடு திரும்பவே இல்லை. இவரை தொடர்பு கொள்ள மனைவி சுரேதா பல முறை முயன்றுள்ளார். அவரால் தொடர்பு கொள்ள இயலவில்லை. 


இதைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினருடன் அவருடைய கணவரை தேடி அந்த ரிசார்ட் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பிரட் லியோன் நீச்சல் குளம் ஒன்றில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த காவல்துறையினர் மற்றும் மனைவி சுரேதா ஆகியோர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின்பு சுரீதா சோகத்தில் அழுதுள்ளார். அவரை சமாதானப்படுத்தி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். 




அந்த விசாரணையின் இறுதியில் வில்லியம்ஸ்(34), பரேக்கி(24). ஜாக்ஸ் வான் வூயுரன்(37) ஆகிய மூவரை இந்த கொலை தொடர்பாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி பிரட் லியானை கொலை செய்ய அவருடைய மனைவி சுரேதா கடந்த ஒராண்டாக திட்டம் தீட்டி வருவதாக வூயுரன் கூறினார். இதற்காக சுரேதா வூயுரனை தொடர்பு கொண்டுள்ளார். வூயுரன் இந்த விஷயத்தில் நேரடியாக இறங்காமல் வில்லியம்ஸ் மற்றும் பரேக்கி ஆகிய இருவரை வைத்து லியோனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். 


அவருடைய வாக்குமூலத்தையடுத்து காவல்துறையினர் லியோனின் மனைவி சுரேதாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், “என்னுடைய கணவர் நீண்ட நாட்களாக என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்” எனக் கூறியுள்ளார். எனினும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சென்ற போது சுரேதாவால் தன்னுடைய கணவன் அடித்ததை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நீதிமன்றம் அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சொந்த கணவரை மனைவியே ஆள் வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: பஸ் டிப்போவில் வைத்து 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் கைது !