ஒவ்வொரு கொள்ளையர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டெயில் உண்டு, அப்படி திருட செல்லும் வீட்டில் செய்யும் சேட்டைகளால் கொள்ளையர்கள் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் மதுரையில் திருடச் சென்ற வீட்டில் இளைஞர் குடிபோதையில் குறட்டைவிட்டு உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






மதுரை மாவட்டம்   அவனியாபுரம் அருகே உள்ள பராசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல் வயது (53). இவர் மரவியாபாரம் செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வீட்டிற்கு திரும்பிய ரத்தினவேல் வீட்டின் பூட்டு உடைந்து உள்ளே வாலிபர் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரத்தினவேல் அவனியாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போதையில் உறங்கிய வாலிபரிடம் விசாரணை செய்ததில் பழங்கநத்தம்  பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் நடராஜன் (வயது 21) என தெரியவந்தது. மேலும் வீட்டிலிருந்த 40 கிராம் தங்கத்தை காணவில்லை என புகார் தெரிவித்ததையடுத்து போதை வாலிபரிடம் அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.




 

திருட வந்த இடத்தில் இளைஞர் குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. வெளியூர் செல்லும் நபர்கள் காவல்துறையின் ஆப் மூலம் தகவல் தெரிவிப்பது நல்லது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.