சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனஸ்ரீயா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனஸ்ரீயா, பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று சமாதானம் செய்து கணவர் கீர்த்திராஜ் மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, தனஸ்ரீயா தலைப் பகுதி மற்றும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளது. இதுதொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தனஸ்ரீயாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தனஸ்ரீயாவின் கணவர் கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதுகுறித்து கூறிய தனஸ்ரீயாவின் பெற்றோர், திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே தங்களது மகள் மகிழ்ச்சியாக இருந்தார். அதன்பின் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமை செய்து வந்ததாகவும், வரதட்சணையாக ஆடி கார் கேட்டு வந்த நிலையில் ஒரு மாத காலமாக மகள் வாழப்பிடிக்காமல் தங்களது வீட்டில் இருந்து வந்ததாகவும், நேற்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டு தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று இரவு 8:30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கீர்த்திராஜ் தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டுக்குச் சென்று பார்த்த போது உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். வீடு முழுவதும் ரத்தமாக இருந்தது. வீட்டிலிருந்து கிரிக்கெட் மட்டையிலும் ரத்தம் இருந்தது. கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. வரதட்சணை கொடுமையால் கொடூரமாக தனது மகளை கொலை செய்தவரை கைது செய்து, மரணத்திற்கு முறையான விசாரணை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


3 ஆம் ஆண்டு திருமண நாளன்று வரதட்சனை கொடுமையால் மனைவியை கணவன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண