சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியில் கணவரை பிரிந்த பெண்ணொருவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுமியுடன், 25 வயதுடைய வாலிபர் ஒருவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அம்மாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த விஸ்வா என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் விஸ்வாவிடம் விசாரணை நடத்தினர். 



அதில் விஷ்வா ஏற்கனவே இரண்டு பெண்களை மயக்கி திருமணம் செய்தது தெரியவந்தது. காவல்துறை நடத்திய விசாரணையில், நாகர்கோவிலை சேர்ந்த விஸ்வா ஆரம்பத்தில் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து உள்ளார். பின்னர் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஜவுளிகடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது அந்தகடையில் வேலை பார்த்த சாம்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுநாளடைவில் காதலாக மாறி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களில் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருமணமான 7 மாதங்களில் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து விஸ்வா கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது அதே பகுதியில் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 20 வயது பெண்ணுடன் விஸ்வாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஸ்வா அந்த பெண்ணை தனது வலையில் சிக்கவைத்து அடிக்கடி சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவருடைய ஆசைவார்த்தையில் இளம்பெண் மயங்கி இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதை தொடர்ந்து இரண்டாவதாக விஸ்வா அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.



பின்னர் இரண்டு குழந்தைகளுடன் அந்தப் பெண்ணை சேலம் அம்மாபேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளார். இந்த நிலையில் விஸ்வாவின் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்த பெண்ணும் கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே விஸ்வாவின் குடும்பத்தினரும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் நெருங்கி பழகத் துவங்கினர். இந்த நிலையில் 40 வயது பெண் விஸ்வாவிடம் நாம் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தால் வாடகை பணம் மிச்சமாகும் எனக் கூறி உள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நேரத்தில் விஸ்வாவின் பார்வை 16 வயது சிறுமி மற்றும் அவரது தாயின் பக்கம் திரும்பியது. இந்த தாய் மற்றும் மகளை மயக்கி தனது காதல் வலையில் சிக்கவைக்க முடிவெடுத்தார். அதன்படி விஸ்வா அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, தனது வலையில் சிக்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தாக கூறப்படுகிறது. இதனிடையில் சிறுமியின் தாயாருக்கும், விஸ்வாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண் தனது மகளுடன் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விஸ்வாவை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் ஆசைவார்த்தை கூறி வேறுபெண்களை ஏமாற்றி உள்ளாரா? என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.