புதுச்சேரி: ஏலச் சீட்டு நடத்தி ரூ.1 கோடியே 31 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


ஏலச் சீட்டு நடத்தி மோசடி 


புதுச்சேரி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் கந்தன் (50), விவசாயம் செய்து வருகிறார், அதே பகுதியில் மர பட்டறை நடத்தி வரும் கோபி என்கின்ற ரத்தினம் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு 20 மாத காலம் கொண்ட 3 லட்சம் ரூபாய் ஏலச் சீட்டில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மாதந்தோறும் சீட்டுத் தொகையை கட்டி வந்த நிலையில், சீட்டு முடிவடைந்தும் கோபி பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.


1 கோடியே 31 லட்சம் பணம் ஏமாற்றிய தம்பதி 


இது தொடர்பாக பலமுறை கோபியிடம் கேட்டும் கந்தன் ஒரு வருட காலமாக காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த கந்தன்,இச்சம்பவம் குறித்து புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கந்தனை போல 110 பேர் அவரிடம் பணம் கொடுத்தது தெரியவந்தது. மொத்தம் அவர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.1 கோடியே 31 லட்சம் பணத்தை ஏமாந்துள்ளது தெரியவந்தது.


ஏலச் சீட்டு நடத்தி ஆடம்பர வாழ்கை 


இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரிடமும் புகாரை பெற்ற போலீசார், கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து ஏலச் சீட்டு நடத்தி வந்ததும், சீட்டு பணத்தில், கார் வீடு என ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது மனைவி வனிதாவையும் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.